மஹர சிறைச்சாலையில் பதற்றம் தீவிரம்: வான்வழி கண்காணிப்பில் விமானப்படை!

மஹர சிறைச்சாலையில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உட்புற நிலைமையை கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை Bell 412 ரக ஹெலிகொப்டரையும் ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் திரண்டதால் அப்பகுதியிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.