ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனைக்கு பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பாராட்டு

ஈட்டியெறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனையை, இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராட்டிப் பேசினார்.
தனது உரையின் தொடக்கத்தில், இலங்கையின் இளம் ஈட்டியெறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த தூரம் இந்தியாவின் முன்னணி ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் சாதனையை விட 4 மீட்டருக்கும் அதிகமானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அபார சாதனை, வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் டங்கன் ஒயிட் மற்றும் சுசந்திகா ஜெயசிங்கவிற்குப் பிறகு இலங்கைக்கு பதக்கம் வென்று தரும் வீரராக ருமேஷ் தரங்க உருவெடுத்துள்ளாரெனும் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய ருமேஷ் தரங்கவிற்கும், அவரது பயிற்சியாளர்களுக்கும், அவரை உருவாக்கிய புனித பீட்டர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் அவர் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார்.