பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் பொத்துவில் பிரதேச சபைக் குழு சந்திப்பு – அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு அழைப்பு

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸாரப் தலைமையிலான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று (24) இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தது. சந்திப்பின் போது, அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்திற்குஒரு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், பொத்துவில் மக்களின் நலனை முன்னிறுத்தி குடிநீர், கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூக அபிவிருத்தி திட்டங்களுக்கு பாக்கிஸ்தான் அரசின் ஒத்துழைப்பை கோரியும் பல வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டன. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்த பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பொத்துவில் மக்களின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு இலங்கை–பாக்கிஸ்தான் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, பொத்துவில் பிரதேசத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதுமையான ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.