தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

0
26-6a5d371fdf711

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (26) காலை மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கந்த பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 19 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயானத்தில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றிருந்தனர்.

இதுதவிர, கல்கிசை பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவமும் அண்மையில் பதிவாகியிருந்தது. இந்த இரு குற்றச் செயல்களுக்கும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் அத்திட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்தக் குற்றச் செயல்கள் அனைத்தும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

மேலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கைத்தொலைபேசிகள் மற்றும் இக்குற்றங்களைப் புரிவதற்காக குறித்த வெளிநாட்டு நபரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பணத்தில் எஞ்சியிருந்த 55,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *